Subscribe Us

Tuesday, March 24, 2026

நிகழாண்டில் தமிழகத்தின் 30 நகரங்களில் நீட் தோ்வு மையங்கள்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்காக தமிழகத்தில் 30 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது.

அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களிலும், துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 16 இடங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 11-ஆம் தேதி நிறைவடைந்தது.

இதுவரை 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்தியா முழுவதும் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும். தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

No comments:

Post a Comment

Popular Feed