
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் ‘மகிழ் முற்றம்’ திட்டத்தின்கீழ் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயரில் 5 மாணவர் குழுக்கள் அமைத்து, தலைவர், அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்மூலம் மாணவர்களிடம் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள், ஆளுமைத் திறன் மேம்பட, மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
இதுதவிர, குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவை இந்த அமைப்பின் நோக்கம் ஆகும்.
மகிழ் முற்றம் மாணவர் குழு கட்டமைப்பின்கீழ், பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களும் குறிஞ்சி, முல்லை உட்பட 5 குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். அனைத்து வகுப்புகளில் பயிலும் மாணவர்களும் இந்த குழுக்களில் சேர்க்கப்பட்டு, எமிஸ் தளம் மூலமாக அதன் விவரம் கண்காணிக்கப்படும்.
அந்த வகையில், நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான மகிழ் முற்றம் மாணவர் குழுவின் செயல்பாடுகளை முறையாக செயல்படுத்த வேண்டும். ஜூன் 30-ம் தேதிக்குள் குழு ஒதுக்கீட்டை முடித்து, ஜூலை 1-ம் தேதிக்குள் குழு அமைப்பின் தலைவர், மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர், குழு பொறுப்பாசிரியர்கள், மாணவர் குழு தலைவர் (ஹவுஸ் கேப்டன்) ஆகியோரை தேர்வு செய்யவேண்டும்.
தொடர்ந்து, மாணவர் அமைச்சர் பிரச்சாரத்தை ஜூலை 6-ம் தேதி மேற்கொள்ள வேண்டும். மாணவர் அமைச்சர் தேர்தல் 7-ம் தேதி நடைபெறும். நிறைவாக, ஒவ்வொரு குழுவுக்கான மாணவர் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள், தலைமை பொறுப்பு ஆசிரியர் ஆகியோரது பதவியேற்பு விழா அனைத்து பள்ளிகளிலும் ஜூலை 10-ம் தேதி நடைபெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment