
தொடக்கக் கல்வியில் ஆயிரக்கணக்கான தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 2 ல் துவங்குகிறது. முதல் நாளிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் நடக்கிறது. இதற்கு ஆசிரியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆயிரக்கணக்கான தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பணிநிரவல் செய்தால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். எனவே முதலில் 4 ஆண்டுகளாக நடக்காமல் உள்ள தலைமையாசிரியர் பதவிஉயர்வை அதிகாரிகள் நடத்த வேண்டும் என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) தொடர்பான நீதிமன்ற வழக்குகளால் தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு 4 ஆண்டுகளாக நடக்கவில்லை. இதனால் ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தது 20 தலைமையாசிரியர்கள் என 412 ஒன்றியங்களிலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் பணிநிரவல் கலந்தாய்வு என்ற பெயரில் அந்த ஒன்றியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை மாறுதல் செய்ய உள்ளனர். 8 ஆயிரம் பேருக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு அளித்தால் அந்த ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றியத்திற்குள் மாறுதல் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
பணிநிரவல் தேவை இருக்காது. தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு இதுவரை 'டெட்' வழக்கை அதிகாரிகள் காரணம் காட்டினர். தற்போது 2028 ஆகஸ்ட்டுக்குள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 'நீதிமன்றம் குறிப்பிட்ட நாளுக்குள் டெட் தேர்ச்சி பெற வேண்டும்' என்ற நிபந்தனை அடிப்படையில், தொடக்கக் கல்வித்துறையில் தலைமையாசிரியர் பதவி உயர்வை நடத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
இதற்கும் பின் உபரி ஆசிரியர் இருக்கும் நிலையில் பணிநிரவல் கலந்தாய்வு நடத்தலாம். பதவி உயர்வு மூலம் ஏற்படும் காலியிடங்களில் பல ஆண்டுகளாக வெளி மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் பெறும் வாய்ப்பும் கிடைக்கும் என்றார்.





No comments:
Post a Comment