Subscribe Us

Monday, August 24, 2026

பள்ளிக் கல்வி - சட்டசபையில் அமைச்சர் வெளியிட்ட 31 புதிய அறிவிப்புகள் என்னென்ன?

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவர்களுக்கு விளையாட்டு உடை, மாணவர்களுக்கு பல், கண், காது பரிசோதனை, ஸ்மார்ட் நூலக அட்டை உள்ளிட்ட 31 முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்:

பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கருத்தியல் புரிதல், பகுப்பாய்வு சிந்தனை மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.18.01 கோடியில் மதிச்சுடர் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழக மாணவர்களின் புதுமை மற்றும் தொழில் முனைவுத்திறன் மேம்பாட்டுத் திட்டம். 3,205 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.4.82 கோடியில் செயல்படுத்தப்படும்.

1 முதல் 8-ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளி மாணவர்கள் திறன்களை மேம்படுத்த 6,980 நடுநிலைப் பள்ளிகளில் சதுரங்கம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் ரூ.20.17 லட்சத்தில் மேம்படுத்தப்படும்.

அரசு, தனியார் மற்றும் பெருநிறுவன மருத்துவமனைகளின் பங்களிப்புடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல், கண் மற்றும் காது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

1 முதல் 12ம் வகுப்பு வரை 2027-28-ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அறிவு பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

மாணவர்களை நாளைய தொழில்நுட்ப முன்னோடிகளாக மாற்ற செயற்கை நுண்ணறிவு எந்திரவியல், புதுமை மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து டிஎன் ஸ்பார்க் திட்டம் செயல்படுத்தப்படும்.

கல்வியின் வலுவான அடித்தளத்தை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அளிக்க, 414 பள்ளிகளில் ஆயத்தப் பயிற்சி மையங்களில் உள்ள 9731 குழந்தைகளுக்கு நவீன கற்றல், பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் மகிழ்வான கற்றல் சூழலை உருவாக்க 37,417 பள்ளிகளுக்கு ரூ.187.29 கோடி ஒருங்கிணைந்த பள்ளி மானியம் வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உலகத்தர கற்பித்தலுக்குத் தேவையான அறிவு, திறன் மற்றும் தலைமைத்துவத்தை வழங்க ரூ.11.30 கோடியில் டிஎன் - லீட்ஸ் திட்டம் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

பொது நூலகங்கள் முழுமையான மின்னுறு அறிவு மையங்களாக மாற்றப்படுவதுடன், ஸ்மார்ட் நூலக அட்டை வழங்கப்படும்.

சென்னை புத்தக கண்காட்சிக்கான அரசு மானியம் ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தி ஆண்டுதோறும் பபாசி அமைப்புக்கு வழங்கப்படும்.

2 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் அறிவுத்திறன்களை உறுதிப்படுத்தும் நோக்கில் 10.5 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் திறன் பிளஸ் திட்டம் ரூபாய் 12.05 கோடி நிதி ஒதுக்கீட்டில் விரிவாக்கம் செய்யப்படும்.

ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கற்றலை வலுப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தமிழ்நாடு தன்னிலை கற்றல் திட்டம் முதற்கட்டமாக 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 70 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

வெற்றிக்கான வாய்ப்புகள் பள்ளிக்கு வரட்டும் என்ற நோக்கில், 172 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேசிய அளவிலான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் வகையில் வெற்றி பாதை திட்டம் ரூபாய் 22.36 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும்.

1,799 அரசு உயர் மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் திறன்மிகு அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூபாய் 21.84 கோடி நிதி ஒதுக்கீட்டில் உபகரணங்கள் வழங்கப்படும்.

படைப்பாற்றல், தலைமைத்துவம், தனித் திறமைகள் மற்றும் கற்றல் ஆர்வம் மலர புத்தகமில்லா கல்வியாக ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டம் 6,279 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூபாய் 1.89 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான புதிய திறன் சார்ந்த தமிழ் இலக்கியப் போட்டிகள் 13,259 பள்ளிகளில் அறிமுக படுத்தப்படும்.

50 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை விளையாட்டு திறனை மேம்படுத்தும் சிறப்பு பள்ளிகளாக உருவாக்க ரூபாய் 2.34 கோடியில் ஸ்போர்ட்ஸ் பிளஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.

உயர் கல்வி வாய்ப்புகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வாய்ப்பு வழிகாட்டுதல்கள் குறித்த முழுமையான தகவல்களை ஒருங்கிணைத்து அளிக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உயர்கல்வி வழிகாட்டி செயலி ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

மாணவர்களின் மன நலனை பேணுவதை உறுதி செய்யும் பொருட்டு மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் உணர்வு நல ஆலோசனை சேவைகள் வழங்கிட துணை எனும் திட்டம் ரூபாய் 27.43 கோடி நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்படும்.

சர்வதேச பல்கலைக்கழகங்களின் வாயிலாக ஆசிரியர்களுக்கான பன்னாட்டு தொழில்முறை மேம்பாடு சார்ந்த படிப்புகளை பெறுவதற்கு ஆண்டுக்கு ரூபாய் 1.8 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆசிரியர்களுக்கான பன்னாட்டு சிறப்பு திறன் மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போருக்கு ஒரு முறை பதிவு, மின்னுரு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் டிஜிட்டல் முறைலான தெரிவு நடைமுறைகளை ஒருங்கிணைத்து முழுமையான மின்னுருவாக்கம் ரூபாய் 4.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.

வாசகர்களின் தேவைகளை நிகழ் நேர தரவுகளின் அடிப்படையில் அறிந்து நிறைவான, வெளிப்படையான நூலக சேவைகளை வழங்க நூலக செயலி ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். 90 பொது நூலகங்களில் ரூபாய் 1.80 கோடி மதிப்பீட்டில் நவீன கழிப்பறை வசதிகள் அமைக்கப்படும்.

தமிழர்களின் தொன்மை சிறப்பை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் வகையில் ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்ட தமிழின் 25 பழம்பெரும் நூல்கள் சிறப்பு மறுபதிப்பாக ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 23.40 லட்சம் மாணவர்களுக்கு புதிய விளையாட்டு உடை ரூபாய் 81.89 கோடி செலவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.

ஓடி விளையாடு முன்னெடுப்பின் கீழ் விளையாட்டு, கலை மற்றும் கல்வி இணை செயல்பாடுகளுக்காக தினமும் ஒரு பிரிவேளை ஒதுக்கீடு செய்யப்படும்.

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து முக்கிய சேவைகளையும் ஒருங்கிணைத்து வெளிப்படையான நிர்வாகத்தை வலுப்படுத்த ‘இ-வாசல்’ ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

No comments:

Post a Comment

Popular Feed