ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை 1 முதல் 8 வரை நடந்தது. தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜூலை 9ல் நடக்க இருந்தது. நிறுத்தம் இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் பொது கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பணியில் இருந்த, இடம் மாறுதல் கேட்க நினைத்த தலைமை ஆசிரியர்கள் விரக்தி அடைந்தனர். காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு போதிய தலைமை ஆசிரியர்களை நியமிக்க முடியாத நிலை தற்போது வரை நீடிக்கிறது. காலிப்பணியிடம் 40 சதவீதம் இதனால் வேடசந்துார் ஒன்றியத்தில் உள்ள தொட்டணம்பட்டி, எரியோடு வைவேஸ்புரம், பூத்தாம்பட்டி, நாகம்பட்டி பாலப்பட்டி, அழகாபுரி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட 8 அரசு நடுநிலைப் பள்ளிகளை போல், மாவட்ட அளவில் 40 சதவீத பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. இதனால் அரசு துவக்க, நடுநிலை பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் பல்வேறு பணி சிரமங்களால் அவதிப்படும் நிலை நீடித்து வருகிறது.
கூடுதல் பணிச்சுமையால் அவதி இச்சூழ்நிலையில் ஆசிரியர்கள் ஆக.1 முதல் 31 வரை (ஒரு மாதம்) மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட துவங்கி உள்ளனர். ஆக.1 முதல் ஆக.14 நடக்க உள்ள கலைத் திருவிழா போட்டிகளும், ஆக.15ல் நடக்க உள்ள சுதந்திர தின விழாவும் பள்ளிகளில் நடத்திய பின், மாவட்ட விழாவிற்கு மாணவர்களை, ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டிய, மறுக்க முடியாத முக்கியப் பணியும் உள்ளது. மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண்களுக்கான தற்காப்பு கலை (கராத்தே) பயிற்சி வகுப்புகள், வாரத்திற்கு 3 நாட்கள் என, 3 மாதங்களுக்கு நடக்க உள்ளது. மேலும் செப்டம்பரில் முதல் பருவத் தேர்வு நடக்க உள்ள நிலையில் தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் கல்வி நலன் சார்ந்த முன்னெடுக்க வேண்டிய பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளன.
தலைமை ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான பொது கலந்தாய்வை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தலை இல்லாத உடல் போல் பள்ளிகள் இயங்க முடியாத நிலை நீடிக்கிறது. தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.










No comments:
Post a Comment