CPS திட்டத்தில், ஊழியர்களின் கணக்குகளுக்கு நிதியை மாற்றாமல், பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டு விட்டது போல, ஆவணங்களில் பதிவு

விழுப்புரத்தை சேர்ந்த ஆர்.சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில், 2000ம் ஆண்டில் நடத்துனராக சேர்ந்து, 2025ல் விருப்ப ஓய்வு பெற்றேன். பங்களிப்பு ஓய்வூதிய தொகை, ஆண்டு ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு தொகை போன்ற ஓய்வூதிய பலன்கள், இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.விருப்ப ஓய்வை ஏற்ற பின், நீண்ட காலம் ஓய்வூதிய பலன்களை பெற காத்திருக்கக் கூறுவது சட்டவிரோதம். எனவே, அனைத்து ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு, நீதிபதி டி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.சுரேஷ் ஆஜராகி, "ஊழியர்களிடம் பங்களிப்பு தொகையை பிடித்தம் செய்தும், போக்குவரத்து கழகங்கள் நிர்வாக பங்களிப்பை செலுத்தவில்லை. ஆனால், பங்களிப்பு தொகை முறையாக செலுத்தப்பட்டு விட்டது போல, ஆவணங்களில் பதிவுகள் செய்யப்பட்டு உள்ளன," என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஊழியர்களின் கணக்குகளுக்கு நிதியை மாற்றாமல், பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டு விட்டது போல, ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அது நிதி முறைகேடாக இருக்கலாம்.எனவே, அனைத்து போக்குவரத்து கழகங்களிலும், சி.பி.எஸ்., திட்டத்தில் உள்ள ஊழியர்களின் கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஊழியர்களின் பங்களிப்பு, நிறுவன பங்களிப்பு முறையாக செலுத்தப்பட்டுள்ளதா; பணம் செலுத்தாமல் பதிவுகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், தகுதியான ஊழியர்களுக்கு சி.பி.எஸ்., தொகை வழங்கப்பட்டு உள்ளதா என்பதை சரிபார்த்து, போக்குவரத்து துறை செயலர், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், ஆக., 27ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.
Share:

No comments:

Post a Comment

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories