கோயம்புத்தூர் மாவட்டம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றமையால் ஆண்டு ஊதிய உயர்வு கருத்துரு தொடர்பாக
கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு நிதியுதவி பெறும் உயர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று ஆண்டு வளகுதியங்கள் பெறப்படாமல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று அதற்கான ஆண்டு ஊதிய உயர்வுகள் தொடர்பாக நியமனம் ஏற்பளிக்கும் அலுவலர் ஆன முதன்மைக் கல்வி அலுவலருக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிகோரும் கருத்துருவை கீழ்க்கண்டவாறு விவரங்களை இணைத்து 2 நகலில் அனுப்பிவைக்குமாறு பள்ளிச் செயலர் / தாளாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி தொடர்பான ஆண்டு ஊதிய உயர்வு விவகாரத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி கோரும் கருத்துருவை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (இடைநிலைக் கல்வி) செயல்முறைகளைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பான கருத்துருவை, தேவையான ஆவணங்களுடன் 2 நகல்களில் அனுப்பிவைக்குமாறு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் செயலர்கள் மற்றும் தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கருத்துருவுடன் பள்ளிச் செயலரின் முகப்புக் கடிதம், ஆசிரியரின் விண்ணப்பம், பணிப்பதிவேட்டின் முதல் பக்கம் மற்றும் நியமனம் பதிவு செய்யப்பட்ட பக்கத்தின் நகல், பணி நியமன ஆணை உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதிகாண் பருவம் முடித்த விவரம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் உண்மைத்தன்மை தொடர்பான ஆவணங்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று மற்றும் பணிப்பதிவேட்டில் செய்யப்பட்ட பதிவின் நகல் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.
ஆண்டு ஊதிய உயர்வு எந்தத் தேதியிலிருந்து வழங்கப்பட்டது என்பது குறித்த விவரத்துடன், நிலுவைத் தொகை தொடர்பான விவரங்களையும் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் உரிய காலத்திற்குள் தேர்ச்சி பெறாமல், காலதாமதமாக தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான விவரங்களையும் கருத்துருவுடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவரங்களைப் பெற்று, நியமன அலுவலரான முதன்மைக் கல்வி அலுவலருக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி கோரும் கருத்துரு அனுப்பப்பட உள்ளது.
இந்த அறிவுறுத்தல் கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.