பள்ளிக்கல்வித்துறையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் கேள்வித்தாள், புளூபிரின்ட் படி அமையாது. பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இதனால், மாணவர்கள் மனப்பாடம் செய்யும் முறை ஒழிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேல்நிலை வகுப்புகளுக்கு புளூபிரின்ட் படிதான் கேள்விகள் கேட்கப்பட்டன. அதனால் மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தில் உள்ள கேள்விகளை மட்டுமே படித்து மனப்பாடம் செய்து தேர்வு எழுதி வந்தனர். இதனால் அதிக மதிப்பெண் எடுத்தாலும், போட்டி தேர்வுகளை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர்.பள்ளியை முடித்துவிட்டு, மருத்துவம், பொறியியல் படிப்புகளிலும் தேர்ச்சி பெற முடியாமல் திணறி வருகின்றனர்.
இதற்கு என்ன காரணம் என்றால். 12ம் வகுப்பு பாடங்களை 2 ஆண்டுகள் நடத்துவது. இதனால் பிளஸ் 1 பாடங்களை படிப்பதில்லை. மனப்பாடம் செய்து எழுதுவதே வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் புதிய பாடத்திட்டதை எழுதுவதற்காக உருவாக்கிய குழு, புளூபிரின்ட் முறையை ஒழித்துவிட்டு, மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாறி பாடப்பகுதியை மட்டுமே படிக்கும் அளவிற்கு பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர். அதன்படி 10, பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகும்போது புரிந்துகொண்டு படிப்பது மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பாடத்தில் கருத்துகள் சேர்ப்பது என அனைத்தும் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி மாதிரி கேள்வி தாள் ஒன்று ஜூலை மாதம் வெளியிட பாடத்திட்ட குழு முடிவு செய்துள்ளது. அதனால் கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்வில் கேள்வித்தாள் தொகுப்பை மட்டும் மாணவர்கள் படித்தால், போட்டி தேர்வுக்கு தயாராக முடியாது. எனவே மாணவர்கள் மனப்பாட முறையில் இருந்து மாற்றி, புரிந்து கொண்டு படிக்கும் நிலமைக்கு கொண்டுவர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பாடத்திட்ட குழு முடிவு செய்துள்ளது. இத்தகைய முறை அறிமுகத்தால் மாணவர்கள் பாடத்தினை முழுவதும் படித்து, புரிதல் திறன் அதிகரிக்கும். போட்டி தேர்வுகள், தமிழக மாணவர்கள் சிம்ம சொப்பனமாகt உள்ள நீட் தேர்வுக்கு தயாராகுவதற்கும் இந்த முறை பெரிதும் உதவியாக இருக்கும்.