Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 22, 2018

வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு: ஜூலை 9-இல் கலந்தாய்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூன் 22) வெளியிடப்படுகிறது.



பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ளன.

இவற்றில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை மே 18ஆம் தேதி தொடங்கியது.

விண்ணப்பிக்க கடைசி நாளான ஜூன் 18ஆம் தேதி வரையிலும் 32,561 மாணவ,மாணவிகள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டு 49,030 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 16 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாகவே வந்துள்ளன.



இதையடுத்து தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் கு.ராமசாமி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். இதையடுத்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாகவே கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது.




சிறப்பு ஒதுக்கீடுதாரர்களில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஒதுக்கீடுக்கு 459 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 275 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தனர். அதில் 261 பேரின் சான்றிதழ்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் ஒதுக்கீடுக்கு 6 பேரும், மாற்றுத் திறனாளிகளில் 60 பேருக்கும், விளையாட்டு வீரர்களில் 320 பேரின் சான்றிதழ்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவில் 130 பேரும், வேளாண் வணிகப் பிரிவில் 120 பேரின் சான்றிதழ்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியலும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர்கள், வேளாண் வணிகப் பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் ஜூலை 17ஆம் தேதியும், இதர சிறப்புப் பிரிவினருக்கு ஜூலை 7ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது. சிறப்புப் பிரிவினர் மட்டும் கலந்தாய்வுக்கு நேரில் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.