JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, June 11, 2018

மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு சலுகை தமிழக அரசு உத்தரவு




அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் மாலை 5.45 மணிக்கு அலுவலகம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலில் பேருந்தில் பயணம் செய்து வீட்டுக்கு செல்ல சிரமமாக உள்ளது.
எனவே மாலையில் முன்னதாக அலுவலகம் விட்டு வீடு செல்ல அனுமதி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடம் குறிப்புரை கேட்ட போது, பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாகச் வீட்டுக்கு செல்ல அனுமதி வழங்கலாம் என பரிந்துரை செய்தார்.



மாற்றுத்திறனாளிகளுக் கான ஆணையரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்ல அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த சலுகை குறித்து தலைமைச் செயலக அலுவலக நடைமுறை மற்றும் அரசு அலுவலக நடைமுறை நூல்களுக்கு தக்க திருத்தம் பின்னர் வெளியிடப்படும். இதுதொடர்பாக உத்தரவு நகல்கள் தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட நீதிபதிகள், ஐகோர்ட்டு பதிவாளர், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.