Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 19, 2018

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழிலும் எழுத அனுமதி: சிபிஎஸ்இ-க்கு ஜாவடேகர் உத்தரவு




தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (சிடிஇடி) தமிழ் உள்பட 20 இந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இத்தேர்தவை எழுத முடியும். தமிழ் உள்பட 17 மொழிகளில் தேர்வு நடத்தப்படத்தப்பட மாட்டாது என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

கடும் எதிர்ப்பு: மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் தொடக்கக் கல்வி, உயர் நிலைக் கல்வி ஆசிரியர் பணிக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில்தான் இத்தேர்வை எழுத வேண்டும் என்ற சிபிஎஸ்இ அறிவிப்புக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.



திமுக கண்டனம்: இது தொடர்பாக சுட்டுரையில் கண்டனம் தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி, தமிழ் உள்பட 17 பிராந்திய மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படமாட்டாது என்று சிபிஎஸ்இ முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. இது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று கூறியிருந்தார்.
முடிவு மாற்றம்: தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிபிஎஸ்இ-யின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஏற்கெனவே நடத்தி வந்ததுபோல 20 மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்' என்று சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டார். இது தொடர்பான தகவலை அவர் சுட்டுரையிலும் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, முன்பு நடத்தியதுபோல ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, வங்க மொழி, காரோ (மேகாலயம், அஸ்ஸாம், திரிபுராவில் பேசப்படும் மொழி), குஜராத்தி, கன்டனம், காசி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிஸோ, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, திபெத்திய மொழி, உருது ஆகிய மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ சுட்டுரையில் அறிவித்துள்ளது.

ஜாவடேகர் பேட்டி: இது தொடர்பாக தில்லியில் உள்ளஅவரது அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு 20 மொழிகளில் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி உரிய காலத்தில் தேர்வை முடிக்க சிபிஎஸ்இ முடிவு செய்திருந்தது. இதற்காக சில மொழிகளுக்கான விருப்பத் தெரிவை சிபிஎஸ்இ குறைந்திருந்தது.

குழப்பம் இல்லை: ஆனால், இந்த விஷயத்தில் சிபிஎஸ்இக்கு நான் பிறப்பித்த உத்தரவில், தமிழ், அஸ்ஸாமி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், காசி, மராத்தி, மலையாளம், பஞ்சாபி, உருது உள்பட 20 மொழிகளிலும் தேர்வை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளேன்.



இந்த உத்தரவை கடந்த 15-ஆம் தேதியன்று பிறப்பித்துவிட்டேன். இதனால், இந்த விஷயத்தில் குழப்பம் ஏதும் இல்லை. முன்பு போலவே இத்தேர்வு நடத்தப்படும்.

இது தொடர்பாக தனியாக சிபிஎஸ்இ தேவையான உத்தரவைப் பிறப்பிக்கும். நீதிமன்றம் நான்கு மாதங்களில் இத்தேர்வை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனால், 20 மொழிகளில் தேர்வை நடத்துவதற்கு கால தாமதமாகும் என்பதால் சிபிஎஸ்இ இதுபோன்ற முடிவை எடுத்திருந்தது. தற்போது இந்த விஷயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.