JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, July 22, 2018

தமிழகத்திலேயே முதல் முறையாக நாடகக் கலையை இந்தக் கல்வியாண்டு முதல் தமிழ் வழியில் கற்றுக் கொடுக்க இருக்கிறது தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை.

தஞ்சை தமிழ்ப்பல்கலையில் தமிழ் மரபுக்கலை படிப்புகள்

தமிழ் மொழியின் முப்பெரும் பிரிவுகளில் ஒன்று நாடகத்தமிழ். இந்த நாடகத் தமிழை, இதன் கொள்கைகளை, கோட்பாடுகளை, நுணுக்கங்களை, இந்த நாடகத் தமிழ் கடந்து வந்த இத்தனை ஆண்டு கால வரலாற்றை, மேற்கத்திய நாடகக் கலைக்கும் நம் மண்ணின் தமிழ் நாடகக் கலைக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை முறைப்படுத்தப்பட்ட கல்வியாக அதுவும் தமிழ் மொழியில் கற்கும் வாய்ப்பு இதுநாள் வரை தமிழகத்தில் இல்லாமல் இருந்தது.



தமிழகத்திலேயே முதல் முறையாக நாடகக் கலையை இந்தக் கல்வியாண்டு முதல் தமிழ் வழியில் கற்றுக் கொடுக்க இருக்கிறது தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை. இரண்டாண்டுகள் முதுகலை படிப்பாக நடத்தப்பட இருக்கும் இந்த நாடகக் கலை குறித்த படிப்பில் நாடகம் எழுதுதல், இயக்குதல், நடித்தல், வசனம் உச்சரித்தல், ஒப்பனை, உடைகள், அரங்கம் அமைத்தல், ஒலி-ஒளி அமைத்தல் போன்ற நாடகம் தொடர்பான பல்வேறு நுட்பங்களும் கோட்பாடாகவும், செயல் வடிவிலும் தமிழ் வழியில் தகுதியான பேராசிரியர்களைக் கொண்டும் திறமையான நாடகக் கலைஞர்களைக் கொண்டும் கற்றுத்தரப்பட இருக்கிறது.

மேலும், மண்ணின் நிகழ்த்துக் கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து போன்றவையும் ஒரு வருட படிப்பாக தமிழ் வழியில் கற்கும் வாய்ப்புடன் இந்தக் கல்வியாண்டு முதல் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விருப்பமும் வாய்ப்பும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.