JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, July 6, 2018

தமிழகத்தில் புதிதாக இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள்: சட்ட மசோதா நிறைவேறியது

தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இந்த மசோதாவை திமுக அறிமுக நிலையிலேயே எதிர்த்தது. மசோதாவை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் க.பொன்முடி, ரகுபதி ஆகியோர் பேசினர்.
சாய், எஸ்எஸ்என்: சாய் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்எஸ்என் பல்கலைக்கழகம் ஆகிய தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான சட் ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-



பல்கலைக்கழகமானது வேந்தர், துணை வேந்தர், இணை வேந்தர், பதிவாளர் உள்ளிட்ட பதவி படிநிலைகளைக் கொண்டிருக்கும். பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவால் வேந்தர் அமர்த்தப்படுவார். அவர் மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் இருப்பார். துணைவேந்தர் நியமனத்தையும் வேந்தர் மேற்கொள்வார். அவரும் மூன்று ஆண்டுகளுக்கு பணியாற்றுவார்.
இடஒதுக்கீடு எவ்வளவு?: நிலையான சேர்க்கை முறையானது பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்படும். அதன்படி, தமிழ்நாடு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 35 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு திமுக உறுப்பினர் பொன்முடி எதிர்ப்புத் தெரிவித்துப் பேசுகையில், ""தனியார் பல்கலைக்கழகங்களை கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம். முழுவதும் தன்னாட்சியாகச் செயல்படும் வகையில் உள்ளது. அரசு கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக இல்லை. வேந்தர் நியமனம் உள்பட அனைத்தும் அவர்களிடமே இருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போதுகூட வேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தது. பல்கலைக்கழகம் முழுவதும் தனியார்மயமானால் அதில் அரசோ, ஆளுநரோ தலையிட முடியாது'' என்றார்.

இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளிக்கையில், "இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. 35 சதவீத இடங்களை ஒதுக்குவதுடன் இட ஒதுக்கீட்டையும் பின்பற்ற வேண்டுமென சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஏழை-எளிய மாணவ-மாணவிகளும் அதில் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும்'' என்றார்.



இதைத் தொடர்ந்து, சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.