Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 23, 2018

ஆண், பெண் குரலில் வித்தியாசம் இருப்பது ஏன்? அறிவியல்-அறிவோம்


ஆண், பெண் குரலில் வித்தியாசம் இருப்பது ஏன்?

பிறக்கும் குழந்தையின் குரலில் ஆண், பெண் வித்தியாசம் இருப்பதில்லை. நான்கு வயதுக்கு மேல்தான் குரல் வித்தியாசம் தோன்றுகிறது.

15 வயதிற்குள் ஆண்களின் குரலில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுவிடும். பெண்களுக்கு, ஐம்பது வயது வரை மாற்றங்கள் குறைவு. அதன்பின்னரே குரலில் மென்மை போய் கரகரப்பு வரும்.



வீணையில் கம்பிகளை மீட்டினால் இசை வருவதுபோல, குரல்வளையில் உள்ள, 'குரல் நாண்கள்' எனப்படும் தசை மடிப்புகள் அதிரும்போது சப்தம் உருவாகிறது. இயல்பில் விறைப்பாக இருக்கும் குரல் நாண்களில், பேச முயலும்போது காற்று பட்டு, தெறித்து அதிர்வுகளை உருவாக்கும்.

இதுவே சப்தம் எழுவதின் தொடக்கம். அதன் பின்னர் வாய், உதடுகள், நாக்கு முதலியவையும் சப்தங்களைப் பேச்சாக மாற்ற உதவுகின்றன. இருந்தாலும் குரலில் மென்மை அல்லது கரகரப்பை உருவாக்குவது குரல்வளைதான்.
பிறக்கும் தருவாயில் ஆண், பெண் குழந்தைகளின் குரல் நாண் ஓரளவு சமமாகவே இருக்கும். 

ஆணின் வளர்ச்சி நிலையில் குரல்வளை விரிவடைந்து விடும். கழுத்தில் உள்ள, 'தைராய்டு கார்டிலேஜ்' எனப்படும் குருத்தெலும்பு புடைத்து வெளிப்படும். இந்த மாற்றத்தையே 'குரல் உடைவது' என்கிறார்கள்.
உடல் வளர்ச்சியின் தொடர்ச்சியாக, பூப்படையும் பெண்களுக்கு 1.25 செ.மீ. முதல் 1.75 செ.மீ. நீளமும், ஆண்களுக்கு 1.75 செ.மீ. முதல் 2.5 செ.மீ. நீளமும் குரல் நாண் இருக்கும். 



குரல் நாணின் நீளம் அதிகமானால் அது வெளிப்படுத்தும் அலைநீளம் கூடும்; அதிர்வெண் குறையும். ஆண்களைப் போல நீளம் கூடாமல் இருப்பதால் பெண்களின் குரலில் மென்மை தொடரும். குழந்தைகளுக்கு 300 முதல்310 முறை குரல் நாண் அதிரும். இதேபோல் ஆணுக்கு 120 முதல் 130 முறையும், பெண்ணுக்கு 200 முதல் 220 முறையும் அதிர்கின்றன.