Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 8, 2018

காலாண்டு தேர்வு முடிவுகள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும் கல்வித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் நிபந்தனை:ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற உத்தரவு!


மதுரை:மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உட்பட ஐந்து கட்டளைகளை விதித்து ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார்.

கலெக்டராக பொறுப்பேற்றபோது 'கல்வி, சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்,' என நடராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாவட்ட கல்வித்தரத்தை ஆய்வு செய்ய தலைமையாசிரியர் ஆய்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய கல்வித்துறைக்கு உத்தரவிட்டார்.



இதன்படி சேதுபதி பள்ளியில் நேற்று கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கல்வித்துறைக்கு ஐந்து நிபந்தனைகளை விதித்தார். அனைத்து அரசு பள்ளிகளிலும் குடிநீர் வசதி செய்ய வேண்டும். போதிய கழிப்பறைகள் வசதி வேண்டும். குறிப்பாக மாணவிகளுக்கென தனிக் கழிப்பறைகள் இருக்க வேண்டும். பள்ளிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.

பள்ளி வகுப்பறைகளில் லேசான பழுது இருந்தால் உடனடியாக பழுதுநீக்கி பராமரிக்க வேண்டும். பயன்படுத்த மற்றும் பராமரிக்க இயலாத வகுப்பறை கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். "கலெக்டரின் இந்நிபந்தனைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கப்படும்," என, சி.இ.ஓ., கோபிதாஸ் உறுதியளித்தார்.

ஆசிரியர்களிடம் விளக்கம்

அரசு பள்ளிகளில் வரும் காலாண்டு தேர்வு முடிவுகள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும். பாடங்களில் தோல்வியடைந்த மாணவரின் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். அத்துடன் பள்ளி தலைமையாசிரியர்களும் விளக்கம் அளிக்க வேண்டும். கல்வித்துறைக்கு அந்தநிலை வராமல் ஆசிரியர்கள் பொறுப்புணர்ந்து பணிபுரிந்து மாணவர்கள் மற்றும் மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு முன் தலைமையாசிரியர் முன்கூட்டியே சென்றுவிடவேண்டும் எனவும் கலெக்டர் கூட்டத்தில் தெரிவித்தார்.