JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, October 18, 2018

உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 2020-இல் 60 சதவீதமாக உயரும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்





தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டில் 60 சதவீதமாக உயரும் என்று மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்தார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் கணினி அறிவியல் ஆராய்ச்சி குறித்த சர்வதேச மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டு அமைச்சர் அன்பழகன் பேசியது:

நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 48.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும் 2020-ஆண்டில் இந்தியாவில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உயரும்.



லயோலா கல்லூரியில் பயில்வது ஒரு சமூக அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இந்த மாநாடு புதிய தேடலாக, விவாதமாக அமைய வேண்டும். 

மேலும் கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவுப் பசியை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு இடையே நடைபெறும் கலந்துரையாடல்களால், பண்பட்ட கட்டுரைகள் பல வெளியிட இந்த மாநாடு உதவியாக இருக்கும் என்றார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.



இம்மாநாட்டில் லயோலா கல்லூரி முதல்வர் ஆன்ட்ரு, கல்லூரிச் செயலர் செல்வநாயகம், ஆராய்ச்சி டீன் வின்சென்ட், கல்லூரி இணை முதல்வர் பாத்திமா வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.