JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, October 25, 2018

வகுப்பறையில் இல்லாத அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்

விழுப்புரம் அருகே பாடவேளையில் வகுப்பறையில் இல்லாமல் நீண்ட நேரம் வெளியே இருந்ததாக, அரசுப் பள்ளி ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.



கல்வியில் பின்தங்கிய நிலையிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தை முன்னேற்றவும், பொதுத் தேர்வுகளில் இந்த மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் அருகேயுள்ள வி.அகரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு ஒரு வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததை அவர் கண்டார். இதுகுறித்து விசாரித்த போது, கணித ஆசிரியரான என்.ஏகாம்பரம் பாடவேளையில் மாணவர்களுக்கு கற்றுத் தராமல் நீண்ட நேரமாக வெளியே இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.



மேலும், ஆசிரியரை கண்காணிக்க தவறியதாக தலைமை ஆசிரியர் பத்மநாபனுக்கு மெமோ வழங்கி விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.