JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, October 31, 2018

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு அதிக அளவில் உள்ளது...மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு




திருமயம்,அக்.30 : புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி மூலம் வட்டார அளவில் பெற்றோர்களுக்கான இரண்டு நாள் விழிப்புணர்வு பயிற்சி திருமயம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது..

பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்துப் பேசியதாவது: மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு அதிக அளவில் உள்ளது..மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை தனியாக பிரிக்காமல் நல்ல இயல்பான நிலையில் உள்ள குழந்தைகளோடு சேர்ந்து பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் ..அப்பொழுது தான் அவர்களின் தரம் உயரும்..வீடுகளையும்,சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருந்தாலே மாற்றுத் திறன் உடைய குழந்தைகளை எவ்வித நோயும் தாக்காது..அரசு உதவித்தொகை மற்றும் நலத்திட்டங்கள் பெறும் பொழுது மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கல்வித்துறைக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றார்.



இப்பயிற்சியில் மருத்துவர் வியாஸ் கலந்து கொண்டு மூளைகாய்ச்சல் விழிப்புணர்வு,மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் அதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகள், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்குரிய சட்டங்கள் மற்றும் அரசின் உதவித் திட்டங்களும் ,தொழில்கல்வியும் ஆகிய தலைப்புகளின் கீழ் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட திட்ட அலுவலர் பழனிவேலு,உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன்,வட்டார கல்வி அலுவலர் ஜேம்ஸ்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

இப்பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் விஜய சாந்தி செய்திருந்தார்.