நவம்பர் 30 வரை பள்ளி ,கல்லூரிகளுக்கு சிறப்புவிடுமுறை வழங்க கல்வியாளர் சங்கமம் கோரிக்கை!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புறப் பகுதிகளுக்கே மின்சாரம் இன்னும் கிடைக்காத சூழலில், கிராமப் புறங்களுக்கு மின்சாரம் என்பது இன்னும் கூடுதல் நாட்களாகும் என்பது கண்கூடாக தெரிகிறது. ஒரு குடம் குடிதண்ணீருக்கு சாலையில் காத்திருக்கும் பொதுமக்களை நேற்று மாலைவரை கண்கூடாக காணமுடிந்தது.



ஒருவேளை உணவுக்காக சாலையில் கையேந்தி நிற்கும் நிலை ஊருக்கே உணவளிக்கும் தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு வரும் என்பதெல்லாம் கனவிலும் நினைத்துப்பார்க்க இயலாத சம்பவம்.

அத்தோடு மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் ஊடகநண்பர்கள், தன்னார்வ அமைப்புகள் இவர்களுடன் ஆசிரியர்கள்தான் பெரும்பாலும் இணைப்புப் பாலமாக செயல்பட்டு வருகின்றனர். நம் டெல்டா மாவட்டங்களை பாதிப்பில் இருந்து விரைவில் மீட்டெடுக்கவும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் *நவம்பர் 30 வரை பள்ளி ,கல்லூரிகளுக்கு சிறப்புவிடுமுறை* அறிவித்து ஆசிரியர்கள் அனைவரையும் களப்பணிக்கும் ஈடுபடுத்திக்கொள்ளவும், பள்ளிகளை புணரமைப்பு செய்திட வாய்ப்பு வழங்கவும் வகைசெய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.



பள்ளிகளில் மரம் அகற்றுதல் என்பது தற்போதைய முதன்மை பிரச்சினையாக இருந்தாலும், அது எளிதில் சரிசெய்ய முடியும். மின்சாரம் இல்லாமல், குடிநீர் இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு வருதல் என்பது மிகச்சவாலானது.

குடிதண்ணீரும், உணவு சமைத்தலும், கழிப்பறை உபயோகமும் அடிப்படைப் பிரச்சினைகளாகும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு சரியான நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.



தொடர்ந்து நிவாரணப்பணிகளில் தற்பொழுது இரவு வரை பெற்ற அனுபவத்தில் இதனைப் பதிவு செய்கிறேன்.

சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்.



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel