Search This Blog

Wednesday, November 28, 2018

வரும் 30ம் தேதி கடைசி நாள் நீட் தேர்வு தேதியை நீட்டிக்க வேண்டும்: புயலால் பாதித்த மாணவர்கள் கோரிக்கை

0 comments
கஜா புயல் பாதித்த மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு எழுதுவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி கடந்தாண்டு மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டனர். தற்போது மருத்துவ கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

வரும் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு 2019, மே மாதம் நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்ததை அடுத்து தற்போது மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றி வருகின்றனர். 



இதற்கு நவம்பர் 30ம் தேதி கடைசி நாள் என்பதால் மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பதிவேற்றி வருகின்றனர். கடந்த 16ம் தேதி கஜா புயல் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை தாக்கியதால், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் மேற்கண்ட மாவட்டங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 



தொலைத் தொடர்பே துண்டிக்கப்பட்டு தனித் தீவுகள் போல காட்சியளிக்கின்றன. இதனால் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக் கெடு 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், மேற்கண்ட மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.



No comments:

Post a Comment