JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, December 6, 2018

வருது புது டெக்னாலஜி ஏடிஎம்களில் பணம் எடுக்க மொபைல் ஆப்ஸ் போதும் : ஸ்கேன் செய்தால் காசு கொட்டும்

ஏடிஎம்களில் யுபிஐ மொபைல் ஆப் மூலம் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக இருக்கிறது. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க டெபிட் கார்டுகள் தேவை. ஏடிஎம் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்ற, இதற்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவர இருக்கிறது.





இதன்படி, ஏடிஎம் இயந்திர திரையில் உள்ள 'கியூஆர் கோடு' ஸ்கேன் செய்தாலே போதும். பணம் எடுத்து விடலாம். மொபைல் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு பீம் ஆப்ஸ் அறிமுகம் செய்தது. இது யுபிஐ அடிப்படையில் இயங்கக்கூடியது. இதில் இருந்து மொபைல் எண், விர்சுவல் பேமன்ட் முகவரி, கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் பரிவர்த்தனை செய்ய முடியும். 



இதே தொழில்நுட்பம்தான் ஏடிஎம்களிலும் வரப்போகிறது. ஏடிஎம் வழங்கும் இயந்திரத்தில் உள்ள கியூஆர் கோடு ஸ்கேன் செய்து, தேவையான பணத்தை உள்ளீடு செய்து பாஸ்வேர்டு தட்டியதும், வங்கிக் கணக்கில் உள்ள பணம் ஏடிஎம்மில் உள்ள கியூஆர் கோடு முகவரிக்கு பரிவர்த்தனை செய்யப்படும். உடனே ஏடிஎம் இயந்திரம் பணத்தை வழங்கும்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி மாதிரி ஏடிஎம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து வங்கிகளுக்கு இந்த நிறுவனம் செயல் விளக்கம் செய்து காண்பித்து வருகிறது. இதுகுறித்து ஏடிஎம் தயாரிப்பு மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள அந்த நிறுவனம் கூறியதாவது: கியூஆர் கோடு ஸ்கேன் முறையில் இயங்கும் ஏடிஎம் இயந்திரம் வைக்க பெரிய அளவில் முதலீடு எதுவும் தேவையில்லை. ஹார்டுவேரில் கூட மாற்றங்கள் தேவையில்லை. ஏடிஎம் சாப்ட்வேரில் சிறு மாற்றம் செய்தாலே போதுமானது. 



டெபிட்கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் முறை சில ஏடிஎம்களில் உள்ளது. அதை விட, யுபிஐ அடிப்படையிலான இந்த பரிவர்த்தனை மிக பாதுகாப்பானதாகவும், விரைவானதாகவும் இருக்கும் என்றனர். பீம் யுபிஐ அறிமுகம் செய்த பிறகு பணமற்ற பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த நவம்பரில் மட்டும் பீம் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 52 கோடியாக உள்ளது என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.



No comments:

Post a Comment