இலவச கட்டாயக் கல்விச் சட்டம்: 12-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்த மத்திய அரசு பரிசீலனை

இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ன் வரம்பை, 12-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இச்சட்டமானது, தற்போதைய நிலையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 6 முதல் 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்குப் பொருந்தும்.



இதன் கீழ், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர்த்து, அனைத்து தனியார் பள்ளிகளும் சமூகத்தின் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்காக 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அசோக் அகர்வால் என்ற கல்வியாளர், இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் வரம்பை 12-ஆம் வகுப்பு வரை நீட்டிப்பது தொடர்பாக பரிந்துரைத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்துக்கு, அந்தத் துறை மூத்த அதிகாரி ஒருவர் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:



கடந்த 2012-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் துணைக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ன் வரம்பை விரிவுபடுத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அந்தப் பரிந்துரையை தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அந்தப் பரிந்துரையை முழுமையாக ஆராய்ந்த பிறகு, அதுதொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவு தொடர்பாகவும் தகவல் தெரிவிக்கப்படும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.



எனினும், இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் வரம்பை விரிவுபடுத்துவது தொடர்பாக எந்தவொரு பரிசீலனையும் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சத்ய பால் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Share:

Categories