அடித்தட்டு வாழ்க்கையில் இருந்து அரசு அதிகாரியாகும் நிலைக்கு உயர்ந்த பின்னும், அரசு போட்டித்தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என தடுமாறும் ஏராளமான இளைஞர்களுக்கு 'யூ டியூப்' மூலமாக இலவச ஆலோசனை வழங்கி, வகுப்பு எடுத்து வருகிறார் அல்லிநகரத்தை சேர்ந்த ஆ.சீனிவாச பெருமாள் 37.அவர் கூறியதாவது:

அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தபின் அதன் தொடர்ச்சியாக குடும்ப சூழல் காரணமாக ஐ.டி.ஐ., மட்டுமே முடிக்க முடிந்தது. அதன் பின் குறைந்த சம்பளத்திற்கு டூவீலர் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்தேன். பின் மில்லில் பிட்டராக ஒன்பது ஆண்டுகள் இருந்தேன். சிறுவயதிலேேய எனக்கு அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. பின்னர் மேலாளர் சுப்ரமணி ஊக்குவிப்பு மூலமாக பழநி ஆயக்குடியில் இலவசமாக நடந்த அரசு போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன். இரண்டு மார்க்கில் தோல்வியடைந்தேன். தேனியில் திண்ணை அமைப்பு துவங்கிய முதல் பிரிவு 15 மாணவர்களில் நானும் சேர்ந்தேன்.
நான் உட்பட 12 பேர் அரசு தேர்வில் வென்றோம். நான் 2014 ல் புதுக்கோட்டை கருவூலத்துறை இளநிலை உதவியாளராக தேர்வானேன். அதோடு தேர்வு படிப்பை நிறுத்தி கொள்ளாமல், குரூப் 1 தேர்விற்கு படித்தேன். அதே ஆண்டில் குரூப் 2 ல் கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளராக தேர்வாகி தற்போது தேனியில் பணியாற்றி வருகிறேன். சிறுவயதில், வழிகாட்டுதல் இன்றி தவித்த நிலையை, வேறு யாருக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தினால், திண்ணை அமைப்பில் இளைஞர்களுக்கு வகுப்பெடுக்க துவங்கினேன். அதனை தொடர்ந்து, நவீன யுகத்தில் அனைத்திற்கும் 'யூ டியூப்' என்றாகிவிட்டது. இதனால் திண்ணை என்ற 'யூ டியூப்' சேனல் ஆரம்பித்து அதில், இலவச பயிற்சி வகுப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்க துவங்கியுள்ளேன்.
இதற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களிடம் படிப்போருக்கு அனைத்துவிதமாக போட்டித்தேர்வில் வெல்வதற்கு மட்டும் பயிற்சி அளிக்காமல், ஒரு நல்ல அரசு அலுவலர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தி வருகிறோம். மனித நேயத்தோடு மக்களை அணுக வேண்டும் என்பதை முக்கியமாக வலியுறுத்துகிறோம், என்றார்.






