எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை எதிர்த்து வழக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் வின்சென்ட்பால்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- தொடக்கக்கல்வி துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.



இவர்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர். அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் பணி அமர்த்த கடந்த டிசம்பர் மாதம் சமூக நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கான ஆசிரியர்கள், கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி கல்வி முடித்திருக்க வேண்டும்.



இந்த பயிற்சி முடிக்காத இடைநிலை ஆசிரியர்கள் எப்படி மேற்கண்ட வகுப்புகளை எடுக்க முடியும். இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருந்தால், அதே துறையில் தான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் விதிகளுக்கு மாறாக தொடக்க கல்வியில் இருந்து, சமூக நலத்துறைக்கு மாற்றி அரசாணை பிறப்பித்து இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த அரசாணையை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.



முடிவில், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான தகுதிகள் என்ன? கடந்த 5 ஆண்டுகளாக எந்த தகுதியின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடந்தது? எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தமிழக அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Share:

Categories