பள்ளித்தலைமை ஆசிரியரின் சேவையைப் பாராட்டி ஒன்றரை லட்ச ரூபாய் பைக் பரிசளித்த கிராம மக்கள்

மதுரையை அடுத்த கொட்டக்குடி கிராமத்தில் ஆர்.சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 1991 ஆம் ஆண்டு முதல் இளநிலை ஆசிரியராக வேதமுத்து பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அதே பள்ளியில் 5 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.



ஒரே பள்ளியில் 27 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஆசிரியர் வேதமுத்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் இத்தனை ஆண்டுகள் ஒரே பள்ளியில் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றி பல்வேறு மாணவர்களின் வாழ்க்கை சிறக்க அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளதைப் பாராட்டி அவரைக் கெளரவிக்கும் விதமாக பொதுமக்கள் சார்பாக சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ராயல் என்ஃபீல்டு வண்டி வாங்கி பரிசளிக்கப்பட்டுள்ளது.


பல ஆசிரியர்கள் நகரங்களில் பணிபுரிவதையே வசதியாகக் கருதும் இந்தக்காலத்தில் தொடர்ந்து 27 ஆண்டுகள் ஒரே பள்ளியில் சிறப்புரப் பணியாற்றி தமது தடத்தை மிகச்சிறப்பாகப் பதித்த வகையில் ஆசிரியர் வேதமுத்துவைப் பாராட்டியே தீர வேண்டும். அவர் இதுவரை எந்த மாணவ, மாணவியரையும் மோசமாகக் கடிந்து கொண்டதே இல்லை. மாணவர்களின் பிழைகளைப் பொறுத்துக் கொண்டு குணமாக எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்துவார். அதனால் ஆசிரியர் வேதமுத்துவை கிராமத்தினர் அனைவருக்குமே பிடிக்கும்.



அத்துடன் அவர் மாணவர்களுக்கும் மிக நெருங்கிய நல்லுள்ளமாக இருந்த காரணத்தால் அவரது பிரிவுபசார விழாவை கொட்டக்குடி ஊர் கூடி நடத்தியது. மாணவர்கள் கண்ணீர் மயமாக தங்களது தலைமை ஆசிரியருக்குப் பிரியா விடை கொடுத்த காட்சி நெகிழ்ச்சியான ஆனந்த அனுபவமாக இருந்தது. ஊர் கூடி நடத்தப்பட்ட பிரிவுபச்சார விழாவில் வைத்து ஆசிரியர் வேதமுத்துவுக்கு ஊரார் சார்பில் ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட என்ஃபீல்டு பைக் பரிசளிக்கப்பட்டது.




Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel