Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 11, 2019

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு - நடவடிக்கை பாய்கிறது


நாட்டின் தலைநகரமான டெல்லியில் இந்திய திட்டமிடல், மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐ.ஐ.பி.எம்.), என்ற பெயரிலும், மேற்கு வங்காள மாநிலம் நாதியாவில் உயிரி ரசாயன கல்வி மானிய கமிஷன் என்ற பெயரிலும் 2 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மீது பல்கலைக்கழக மானியக்குழு யு.ஜி.சி. கடும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. போலீசில் புகார் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.




அதே நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அவற்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 8, டெல்லியில் 7, மேற்கு வங்காள மாநிலம், ஒடிசா மாநிலங்களில் தலா 2, பீகார், கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகியவற்றில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

இதுபற்றி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ராஜாங்க மந்திரி சத்யபால்சிங் எழுத்து மூலம் அளித்த ஒரு பதிலில் கூறி இருப்பதாவது:-

பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் நடத்திக்கொண்டு, மக்களை முட்டாள் ஆக்கும் விதத்தில் தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருகிற போலி பல்கலைக்கழகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவை உரிய அனுமதியின்றி நடத்தப்படுபவை ஆகும்.




மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மைச் செயலாளர்கள், கல்வித்துறை செயலாளர்களுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் தங்கள் பகுதியில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் பல்கலைக்கழக மானியக்குழு போலி பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு அவற்றில் சேர வேண்டாம் என மாணவ, மாணவிகளைக் கேட்டு வந்தும் அவற்றில் மாணவர்கள் சேருவதால்தான் அவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.