Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 9, 2019

நிலுவைத்தாள் மாணவர்களுக்கு பெரியார் பல்கலை.யில் சிறப்புத் தேர்வு


பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் முடிக்காமல் நிலுவைத் தாள்களை வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்று தங்கள் படிப்பு வருடம் முடிந்து, அதன் பின்னரும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவைத்தாள் வைத்துள்ள மாணாக்கர்களின் நிலுவைத்தாள்களை, தேர்வு எழுதுவதற்கான சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது. நிலுவைத்தாள்கள் வைத்துள்ள மாணவர்கள் அவர்கள் அப்போது பயின்ற பழைய பாடத் திட்டத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.



மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்கள் வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் ஒறுப்புக் கட்டணமாக ரூ.2000-ம் ஒவ்வொரு பாடத்தாளுக்கும் சேர்த்து செலுத்த வேண்டும். பல்கலைக்கழக இணைவு பெற்றிருந்த பொறியியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடம் பயின்று படிப்பு வருடம் முடிந்து, அதன் பின்னர் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த மாணாக்கர்களின் நிலுவைத்தாள்கள் தேர்வு எழுதுவதற்கான சிறப்புத் தேர்வு நடைபெற உள்ளது. அம் மாணாக்கர்கள் பயின்ற பழைய பாடத் திட்டத்திலேயே தேர்வு எழுதலாம்.



மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்கள் வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் ஒறுப்புக் கட்டணமாக ரூ.1500-ஒவ்வொரு பாடத்தாளுக்கும் சேர்த்து செலுத்த வேண்டும். மேற்கண்ட மாணாக்கர்களின் தேர்வுகள் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 8-ந்தேதி முதல் தாங்கள் பயின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் பெற்றுக் கொள்ளலாம். பெரியார் பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வுக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, பிப்ரவரி 22-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.