JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, February 5, 2019

புதிதாக ஐடிஐ தொடங்க விண்ணப்பிக்கலாம்: வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக ஐடிஐ தொடங்கவும், ஏற்கெனவே உள்ள தனியார் ஐடிஐகளுக்கு அங்கீகார நீட்டிப்புப் பெறவும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தத்துறை சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:



தமிழகத்தில் 2019-2020 -ஆம் கல்வியாண்டுக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் ஏப்.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்படும்.



2019-2020-ஆம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்குத் தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவுக்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தகவல் பெற www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகியஇடங்களில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம்.