Breaking

Wednesday, February 6, 2019

ஊதிய உயர்வு கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட, டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு


ஊதிய உயர்வு கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட, டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், காலமுறை ஊதியம், மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 2018 டிச., 4ல், புறநோயாளிகளுக்கு



சிகிச்சை அளிக்க மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.இந்த போராட்டத்தால், சென்னை உட்பட, பல மாவட்டங்களில், நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அன்றைய தினம், பணிக்கு வராத டாக்டர்கள் குறித்த விபரங்களை அளிக்கும்படி, மாவட்ட சுகாதார தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பணிக்கு வராமல், போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களிடம், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட உள்ளது. அதன்பின், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.



அதே நேரத்தில், 'மகப்பேறு, உடல்நல குறைவு உள்ளிட்ட காரணங்களால், முன்கூட்டியே அனுமதி பெற்று, விடுப்பில் உள்ளவர்களுக்கு, பாதிப்பு ஏற்படாது' என, தமிழக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.