JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, March 2, 2019

நீட், ஐஐடிக்கு ஏற்றபடி பிளஸ் 2 கேள்வித்தாள் : அமைச்சர் செங்கோட்டையன்

நீட், ஐஐடி போன்ற உயர்கல்விக்கு தயாராகும் வகையில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.



சென்னை துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் முன்னோடியாக தமிழக மாணவர்களாக திகழ வேண்டும். சிவகங்கையில் கேள்வித்தாள் அடங்கிய அறையில் இருந்து கேள்வித்தாளை எடுக்க முயற்சி நடந்தது. அதை தடுத்து நிறுத்தி விட்டோம். வினாத்தாள்கள் எல்லா மாவட்டங்களிலும் பாதுகாப்பாக இருக்கிறது.



இந்த ஆண்டு கேள்வித்தாள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் வரவேற்றுள்ளனர். நீட், ஐஐடி போன்ற உயர்கல்விக்கு தயாராகும் வகையில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுதுகின்றனர். சிறை கைதிகள் 45 பேர் தேர்வு எழுதுகின்றனர் .இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ஜெயவர்தன் எம்.பி, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உடனிருந்தனர்.