JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, March 16, 2019

கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனையை அறிமுகம் செய்கிறது : எஸ்பிஐ வங்கி


யோனோ கேஷ் செயலியின் மூலம் ஏடிஎம்களில் கார்டு இல்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளதாவது:

யோனோ கேஷ் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் ஏடிஎம் இயந்திரங்களில் கார்டு இல்லா பரிவர்த்தனை மேற்கொண்டு பணம் எடுக்கலாம். இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனையை அறிமுகம் செய்யும் முதல் வங்கி எஸ்பிஐ ஆகும். இந்த வசதியை இந்தியா முழுவதிலுமுள்ள 16,500 எடிஎம்களிலிலும் பயன்படுத்தலாம்.


வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி பணம் எடுக்க விரும்பினால் யோனோ கேஷ் செயலியை அவர்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு, 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். அதன்பிறகு, பரிவர்த்தனைக்காக அங்கீகாரமளிக்கும் 6 இலக்க அடையாள எண் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும்.


இந்த 6 இலக்க பரிவர்த்தனை அங்கீகார எண்ணை பெற்ற அடுத்த 30 நிமிடங்களுக்குள் தங்களது அருகாமையில் இருக்கும் யோனோ கேஷ் பாயின்டில் பயன்படுத்தி பணத்தை எடுக்க வேண்டியது அவசியம். யோனோ கேஷ் பாயின்டில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் தங்களது பின் மற்றும் அங்கீகார எண்ணை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவிடுவது முக்கியம்.


இந்த புதிய வசதி, கார்டு மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்க உதவுவதுடன், பணப் பரிவர்த்தனைக்கு பாதுகாப்பையும் அளிக்கும் என்றார் அவர்.