Wednesday, March 6, 2019

நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்


கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.



இந்தியப் பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்யும் சிஎம்ஐஇ (CMIE) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் சென்ற பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 7.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2018-ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை 5.9 சதவிகிதமாக இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.




நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி நிலவரப்படி 40 கோடியாக இருந்ததாகவும், ஆனால் 2018 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 40 கோடியே 60 லட்சமாக இருந்ததாகவும் சிஎம்ஐஇ ஆய்வு தெரிவிக்கிறது.



பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்டவைகளால் 2018-ஆம் ஆண்டில் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருப்பதாகவும் அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதேநேரம் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட வேலை இழப்புகள் குறித்த புள்ளிவிவரம் தங்களிடம் இல்லை என அரசு தெரிவித்திருந்தது.