JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, April 10, 2019

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 27 லட்சம் இளைஞர்கள்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு அரசு வேலையை எதிர்பார்த்து 27 லட்சத்து 41 ஆயிரம் இளைஞர்கள் காத்திருப்பது தெரிய வந்துள்ளது.



தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், சென்னையில் கூடுதலாக மாவட்ட சிறப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல்முறை வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் முதுகலை படிப்பு மற்றும் பிஇ,எம்பிபிஎஸ். எல்எல்பி, பிஎஸ்சிவிவசாயம் போன்ற தொழிற்கல்வி படிப்பு தகுதிகளை இருப்பிடத்துக்கு ஏற்ப சென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.


இப்பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும். இல்லாவிட்டால் அது காலாவதியாகிவிடும். இந்நிலையில், 31.3.2010 நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் பற்றியபுள்ளி விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. 73 லட்சத்து 12 ஆயிரம் பேர் அதன்படி, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் சேர்த்து பதிவுதாரர்களின் எண்ணிக்கை 73 லட்சத்து 12 ஆயிரத்து 390 ஆக உள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 17 லட்சத்து 41 ஆயிரத்து 402 ஆகவும்,

19 முதல் 23 வயது வரையுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 93 ஆயிரத்து 351 ஆகவும், 24 முதல் 35 வயது வரையில் அரசு வேலை வேண்டி காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 41 ஆயிரத்து 521 ஆகவும், 36 வயது முதல் 57 வயது வரையுள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 29 ஆயிரத்து 429 ஆகவும் உள்ளன. மேலும் 57 வயதுக்கும் மேற்பட்ட 6,687 பேரும் அரசு வேலையை எதிர்நோக்கியிருக்கிறார்கள். கல்வித்தகுதி வாரியாக.


கல்வித்தகுதி வாரியான பதிவுதாரர்கள் எண்ணிக்கை விவரம்:எஸ்எஸ்எல்சி-க்கு குறைவான தகுதியுடையவர்கள் - 3,46,051 பேர், பிளஸ் 2 முடித்தவர்கள் - 33,54,282 பேர், பொறியியல் டிப்ளமோதாரர்கள் - 2,77,229 பேர், இடைநிலை ஆசிரியர்கள் - 2,07,239 பேர், பிஏ பட்டதாரிகள் - 4,40,264 பேர், பிஎஸ்சி பட்டதாரிகள் - 5,84,272 பேர், பிகாம் பட்டதாரிகள் - 3,03,573 பேர், பிஎட் பட்டதாரி ஆசிரியர்கள் - 3,64,701 பேர், பொறியியல் பட்டதாரிகள் - 2,27,879 பேர். மேற்கண்ட விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது