வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நாளை இறுதி ஆணை: மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தேர்தல் அலுவலர்களுக்கு எந்த வாக்குச்சாவடியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான இறுதி ஆணை நாளை வழங்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது.


சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் பணியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யார் யார் எந்த வாக்குச்சாவடியில் பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பான இறுதி ஆணை மூன்று தொகுதிகளுக்கான பொது பார்வையாளர்கள் முன்னிலையில் தயார் செய்யப்பட்டு, நாளை காலை 10 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும்.



வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் அனுப்பும் மையத்தில் ஆஜராகி தங்களது ஆணையினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணைருமான பிரகாஷ் அறிவித்துள்ளார். பொருட்கள் அனுப்பும் மையம் குறித்த விவரம் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்குள் எஸ்எம்எஸ் கிடைக்கப் பெறாதவர்கள் அவரவர் குழுவில் உள்ள மற்ற வாக்குச்சாவடி அலுவலர்களை தொடர்புகொண்டு மையங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் அவரது கடமையிலிருந்து மீறாமல் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். மீறினால் இந்திய பிரதிநிதிதுவ சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Share:

Total Pageviews

Categories