JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, May 24, 2019

32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் வரும் ஜூன் முதல் வாரத்தில் மழலையர் வகுப்புகளை தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், அவற்றுக்கான மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில், "ப்ரீ.கே.ஜி. - எல்.கே.ஜி.- யு.கே.ஜி' எனும் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.

ஆனால், அனைத்து தனியார் நர்சரி பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் பெற்றோர் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி குழந்தைகளைச் சேர்க்க வேண்டியுள்ளது.
இந்தப் பிரச்னையை தீர்க்கும் வகையில் அரசுப் பள்ளிகளிலும், கே.ஜி
வகுப்புகளைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 2018 டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதற்காக 2,381 பள்ளிகளும், அங்கன்வாடிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 2018-ஆம் ஆண்டு புதிய மாணவர்களை சேர்க்க முடியவில்லை.


இதையடுத்து 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர்களை சேர்த்து மழலையர் வகுப்புகளை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும், எல்.கே.ஜி. சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோன்று மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ள 32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.