Thamizhkadal WhatsApp Channel

7,726 பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு: ஜூன் மாதத்துக்குள் செயல்படுத்த உத்தரவு

தமிழகத்தில் 7,726 அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைந்த தொடுவுணர் கருவி (பயோமெட்ரிக்) மூலம் வருகைப்பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

எனினும், முறையான பயிற்சிகள், தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் பெரும்பாலான பள்ளிகளில் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை நீடித்தது. இதை சரிசெய்யும் பணிகளில் பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், மாநிலம் முழுவதுமுள்ள 7,726 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ப கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்துள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்களை சரிபார்த்து மீண்டும் பதிவேற்ற வேண்டும்.


பயோமெட்ரிக் முறை தொடர்பாக தலைமையாசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்குவதுடன், இதுதொடர்பான பணி விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Share:

Total Pageviews

Categories