Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 8, 2019

இந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் புதிய திட்டம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:



அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, லேப்டாப், சைக்கிள், புத்தகப்பை என 14 வகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 28 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளில் 37 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. உயர்கல்வியில் இந்தியாவின் இலக்கு 25.6 சதவீதமாகும். ஆனால், தமிழகத்தில் 48.9 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும்.


6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட உள்ளது. நடமாடும் நூலகத்தில் உள்ள நடைமுறை சிக்கலால் மாணவர்களின் லேப்டாப்களிலேயே புத்தகங்களை அறிந்து கொள்ளும் வகையில் இணைய நூலகம் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளுக்கு பிறகு கல்வித்துறைக்கு தனிச்சேனல் ஏற்படுத்தப்படும். ரோபோட்டிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கல்வித்துறையில் காலியாக உள்ள சுமார் 7 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ், ஆங்கில வழிக்கல்வி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.