பிஎச்.டி. முடித்தவர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை: அண்ணா பல்கலை. அறிவிப்பு


ஆராய்ச்சிப் படிப்பை (பிஎச்.டி.) முடித்தவர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய உதவித் தொகைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎச்.டி. முடித்து மூன்று ஆண்டுகளுக்குள் மட்டுமே இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.



உதவித் தொகை எவ்வளவு:

இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 45 ஆயிரம் ஆராய்ச்சி உதவித் தொகையும், ரூ. 10,000 வீட்டு வாடகைப் படியும், பயணம் மற்றும் இதர செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் உதவித் தொகையும் வழங்கப்படும். அதோடு ஆண்டுக்கு 20 நாள்கள் விடுமுறையும் அளிக்கப்படும்.
மாணவர்களுடைய ஆராய்ச்சியும், புதிய கண்டுபிடிப்புகளும் திருப்திகரமாக இருக்குமானால், உதவித் தொகை மூன்றாவது ஆண்டுக்கும் நீட்டிக்கப்படும்.



தொடர் ஆய்வு:

இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை தங்களுடைய ஆராய்ச்சி பணி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆய்வறிக்கையை பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்படும் ஆராய்ச்சி செயல்பாடுகள் ஆய்வுக் குழு ஆய்வு செய்யும்.
மாணவர் சமர்ப்பிக்கும் அறிக்கை மீது குழு திருப்தியடையவில்லையெனில், ஆராய்ச்சி உதவித் தொகை உடனடியாக ரத்து செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel