Search This Blog

Thursday, June 20, 2019

காலியாக உள்ள பணியிடங்களில் ஓய்வுபெற்ற விஏஓக்கள் 1000 பேரை15,000 சம்பளத்தில் நியமிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

0 comments
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1,000 பேரை 15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த 25.2.2019ம் தேதி அரசாணை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ) பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில், 2,896 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலியிடங்களில் தகுதியும், அனுபவமும் உள்ள ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே பொறுப்பான வகையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை காலி பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும்.



முதல்கட்டமாக, மாநிலம் முழுவதும் 1,000 பேரை நியமிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மாவட்டங்கள் தோறும் காலியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மாதம் ரூ15,000 தொகுப்பூதிய அடிப்படையில் தேவைக்கேற்ப நியமிக்கலாம். இந்த நியமனம் ஓராண்டு அல்லது தேவையான காலம் வரை தொடர அனுமதிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில், தொகுப்பூதிய அடிப்படையில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்யகோபால், காலி பணி இடங்களில் ஓய்வு பெற்ற விஏஓ அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், காலி பணியிடங்களில் தகுதிவாய்ந்த நபர்களை நியமிக்கும்படியும், அவர்களுக்கு ரூ15 ஆயிரம் ஊதியம் வழங்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.