Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 13, 2019

11, 12ம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம்?...6 பாடங்களை 5 பாடங்களாக குறைக்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை

சென்னை: 11ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டுவர தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வில் புத்தகத்தை பார்த்து விடைகளை எழுத மாணவர்களை அனுமதிக்கலாமா? என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 11,12ம் வகுப்புகளில் மொத்தமுள்ள 6 பாடங்களை 5 பாடங்களாக குறைக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 11, 12ம் வகுப்புகளில் பொறியியல், மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு தனிப்பாடப்பிரிவு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், பொறியியலில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உயிரியல் பாடம் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.



தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல் என ஐந்து பாடங்களை படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கணித பாடம் இருக்காது என்றும், தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், உயிரியல் என 5 பாடங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 12ம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல மொழித்தாள்கள் 2-லிருந்து 1-ஆக மாற்றம் செய்யப்பட்டது.



தற்போது 5 பாடத்திட்டங்கள் முறையை அமலுக்கு கொண்டு வந்தால் நடைமுறையில் இருக்கக்கூடிய 600 மதிப்பெண் என்பது 500 மதிப்பெண்களாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தேர்வு சமயத்தில் மாணவர்கள் பாடப்புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை அறிமுகப்படுத்துவதற்கு பரிசீலனை நடைபெற்று வருகிறது. மேலும், 10ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கு இனி இரு தாள் தேர்வு இல்லை என்றும், அதற்கு பதிலாக ஒரே தாள் தேர்வு முறை கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதால் தேர்வு அட்டவணை வெளியாகவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.