பிளஸ் 1 பாடத்தால் மாணவர் சேர்க்கை சரிவு ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள்

''கடந்த ஆண்டு அறிமுகமான பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில் கடுமையான பாடங்கள் இருப்பதால் அரசுப்பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளது'' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பிளஸ் 2 மாணவர்கள் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., மற்றும் 'நீட்' தேர்வுகளை எதிர்கொள்ளும் விதத்தில் பாடத்திட்டங்களை கல்வித்துறை மாற்றி வருகிறது. கடந்த ஆண்டு பிளஸ் 1க்கு -புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்தனர். இக்கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 க்கு புதிய பாடத்திட்டம் வந்துள்ளது.பிளஸ் 1 தாவரவியல், கணித புத்தகங்கள் மிக கடினமாக உள்ளன.

உயிரியல் புத்தகம் 1,300 பக்கங்களுடன் உள்ளது. இதற்கு கடந்த ஆண்டிலேயே 13 மாவட்டங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து பள்ளிக்கல்வி செயலரிடம் அறிக்கை அளித்தோம்.பிளஸ் 1 முதல் குரூப் பாடங்கள் அனைத்தும் கடுமையாக இருப்பதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளது. இதனால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேர்வதில் ஆர்வமாக உள்ளனர்.இது குறித்து ஆசிரியர் சங்கம் சார்பில் ஜூன் 17 ல் கல்வித்துறை செயலரிடம் மனு அளித்தோம். மேல்நிலைப்பள்ளிகளில் தேசிய போட்டி தேர்வுக்கு ஏற்ற பாடங்களை உடனே கொண்டு வராமல் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்களில் படிப்படியாக கொண்டு வரலாம். இதனால் மாணவர்கள் எளிதில் தங்களை தயார்படுத்தி திறனை வளர்த்துக்கொள்வர் என தெரிவித்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Share:

Total Pageviews

Categories