JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, June 26, 2019

கல்வி சேனல் ஒளிபரப்பு தலைமை ஆசிரியர் சொந்த செலவில் 'டிவி'

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி சேனலை மாணவர்கள் பார்ப்பதற்கு, தலைமை ஆசிரியர் சொந்த செலவில் 'டிவி' வாங்கி வைக்கவும், மாதந்தோறும் கேபிள் கட்டணம் செலுத்தவும் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கற்றல் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் கல்வி சேனல் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகம் 8வது தளத்தில் இருந்து ஒளிபரப்பாகின்றன. இதன்மூலம் கல்வி சார்ந்த திட்டங்கள், விளக்கங்கள், செய்திகள், நீதிக்கதைகள் என மாணவர் நலன் சார்ந்த 38 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

முதற்கட்டமாக 53 ஆயிரம் அரசு பள்ளிகளில் இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. ஆனால் கிராமப்புறங்களில் பெரும்பாலான பள்ளிகளில் 'டிவி' இல்லை. ஆனால் அந்த பள்ளிக்கும் கேபிள் இணைப்பு வழங்கி 'செட்டாப் பாக்ஸ்'கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி சேனல் ஒளிப்பரப்புவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தலைமை ஆசிரியரே ஒரு வாரத்திற்குள் சொந்த செலவில் 'டிவி' வாங்கி பள்ளிகளில் வைத்து, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:கல்வித்துறையில் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிடப்படுகின்றன. அவை நிறைவேற்றப்படுகின்றனவா எனத் தெரியவில்லை. கிராமப் புறங்களில் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி இல்லை. சுற்றுச்சுவர் இன்றி பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

அங்கும் கல்வி சேனல் பார்க்க அரசு 'செட்டாப் பாக்ஸ்' வழங்கப்பட்டுள்ளது.ஆனால் 'டிவி' இல்லை. 'டிவி'யை தலைமை ஆசிரியரே வாங்கி வைக்க வேண்டும் என அதிகாரிகள் வாய்மொழியாக கட்டாயப்படுத்துகின்றனர். இதுதவிர மாதந்தோறும் கேபிள் கட்டணம் செலுத்துவது யார், அதற்கு ஆகும் மின் கட்டணத்தை யார் செலுத்துவது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இதை கல்வித்துறை விளக்க வேண்டும், என்றனர்.