
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் சிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாட்சா-அப்ரோஸ் பேகம் தம்பதியினர். இவர்களுடைய மகன் முகமது யாசின், அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்த வருகிறார். இவர் கடந்தாண்டு சாலையில் கேட்பாரற்று கிடந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து பத்திரமாக எடுத்துச் சென்று தனது பள்ளியின் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைத்தார். முகமது யாசினின் செயலைக்கண்டு வியந்த ஆசிரியர்கள், அவரை அழைத்துக் கொண்டு ஈரோடு மாவட்ட காவலதுறை எஸ்.பி., சக்திகணேசனை சந்தித்து, சிறுவனின் கையாலையே பணத்தை ஒப்படைத்தனர்.
இந்த செய்தி ஊடகங்களில் வெளிவர, நடிகர் ரஜினிகாந்த் சிறுவன் முகமது யாசினை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். மேலும், சிறுவனின் கல்விச் செலவை ரஜினிகாந்த் முழுவதுமாக ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், சிறுவன் முகமது யாசினைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஆத்திச்சூடியில் 'நேர்பட ஒழுகு' என்ற தலைப்பில் கார்டூன் விளக்கப்படம் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதன்முடிவில் நேர்பட ஒழுகு என்பதற்கு எடுத்துக்காட்டாய், காவல்துறை எஸ்பியிடம் முகமது யாசின் பாராட்டு பெறும் போட்டோ இடம் பெற்றுள்ளது.


