Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 28, 2019

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள மடிகணினிகளுக்கு போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றறிக்கை



தமிழகம் முழுவதும் பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள மடிகணினிகளுக்கு போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ்2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிகணினிகள் கடந்த 2011ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மடிகணினிகளை தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் டெண்டர் முடிந்து விட்டதால், கடந்த 2017-18ம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிகணினிகள் வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர் மீண்டும் டெண்டர் விடப்பட்டு தற்போது பிளஸ்2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிகணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 15 லட்சம் பேருக்கு மடிகணினிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் மடிகணினிகள் அனுப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், மடிகணினிகள் வழங்கவில்லை என்று பல மாவட்டங்களில் மாணவ, மாணவிகள் படித்த பள்ளிகளின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மடிகணினிகளின் எண்ணிக்கை விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் சரி பார்க்க வேண்டும்.


மேலும் பெறப்படும் மடிகணினிகளை காவல்துறை உதவியுடன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு அந்தந்த தலைமையாசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

இரவுக்காவலர் இல்லாத பள்ளிகளுக்கு அருகிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் இரவுக்காவலரை மாற்றுப்பணியில் பணியமர்த்தி ஆணை வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், மாற்றுப்பணி விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது