Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 14, 2019

முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்: பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தல்


முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தை (ஜூன் 15) முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் காலை வணக்கக் கூட்டங்களில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
உலக சுகாதார நிறுவனம், வயதானவர்களைப் பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதியை முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினமாக அனுசரித்து வருகிறது. மாணவர்கள் முதியோர்கள் மீது அன்பு பாராட்டவும், மரியாதை செலுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதன்படி இந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி அனைத்து பள்ளிகளிலும் காலை வணக்கக் கூட்டங்களில் முதியோரை மதிப்போம் என்ற தலைப்பிலான உறுதிமொழியை மாணவர்கள் ஏற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை அல்லது திங்கள்கிழமை இந்த உறுதிமொழி எடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.