Thursday, June 20, 2019

விளையாட்டு பாட வேளைகளில் மாணவர்களை தலைமையாசிரியர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.

புதுக்கோட்டை,ஜீன்.19: விளையாட்டு பாடவேளைகளில் மாணவர்களை தலைமையாசிரியர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசினார்.2019-2020 ஆம் ஆண்டுக்கான புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான அனைத்துப் பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான பொறுப்பாளர்கள் தேர்வுக் கூட்டம் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.


கூட்டத்தினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: படிப்பு எவ்வளவு முக்கியமோ அது போல உடற்பயிற்சி மிகவும் முக்கியம்.உடல்,உள்ளம்,ஆன்மா ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய திறன் சார்ந்த உடற்பயிற்சியினை மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் அளிக்க வேண்டும்.விளையாட்டு பாடவேளையில் மாணவர்களை விளையாட தலைமையாசிரியர்கள் அனுமதிக்க வேண்டும்.தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்களை நன்கு பயன்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கு ஒழுங்கு கட்டுப்பாடுகளை போதிக்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் பிரதி வாரத்தில் ஒரு நாள் கூட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம் பயிற்சி செய்ய வைக்க வேண்டும்.ஜீலை 15 ஆம் தேதிக்குள் அனைத்துப் பள்ளிகளும் உடற்தகுதி சோதனை தேர்வை முடித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.நாளை மறுநாள் ஜீன் 21 ஆம் தேதி உலக யோகா தினத்தை அனைத்து பள்ளிகளும் கடைப்பிடித்து மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.


கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ( பொறுப்பு) இரா.சிவக்குமார்,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் அனைத்து உயர்நிலை,மேல்நிலை ,மெட்ரிக்வபள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குயர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.