நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு... அடித்து தூக்கிய தமிழக மாணவ, மாணவிகள்..!


நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு மே 5 மற்றும் மே 20 என 2 கட்டங்களாக நடைபெற்றது. மே 20-ம் தேதியன்று, ஒடிசாவில், போனி புயலால் பாதித்த பகுதிகளுக்கு மட்டும் நடத்தப்பட்டது. மற்ற அனைத்து மாநிலங்களிலும், மே 5-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.


சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருந்தனர். தேர்வுக்கான கணினி வழி விடைத்தாள் திருத்தம் முடிந்துள்ளது. இறுதி விடைத்தாள் குறிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்களில் 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 9.01 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய அளவில் முதல் 50 இடங்களுக்குள் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் யாரும் இடம்பிடிக்கவில்லை.

அதேசமயம் தமிழக மாணவியான ஸ்ருதி அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்துள்ளார். அவர், 720 மதிப்பெண்களுக்கு 625 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நளின் கந்தல்வால் என்ற மாணவர், 701 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
Share:

Categories