விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் மாநில அரசும், கல்வித்துறையும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடைபெற்றதாகவும், பணம் வாங்கிக் கொண்டு பலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 10 பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி நிர்மலாதேவி உட்பட 10 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விடைத்தாள் திருத்தத்தில் தவறு நடைபெறுவது வழக்கமாகி விட்டது என்றும், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன எனவும் தெரிவித்தார்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுத்து, விடைத்தாள் திருத்தம் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.
கேள்வித்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் மாநில அரசும், கல்வித்துறையும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், இதில் தவறு நடைபெற்றால் முழு நடைமுறையையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என தெரிவித்த நீதிபதி, இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய முடியாது என தெரிவித்த நீதிபதி, மனுதாரர்கள் 2 வாரத்தில் குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், மனுதாரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.