Monday, July 1, 2019

வங்கி சேவை கட்டணம்; இன்று முதல் விலக்கு


மும்பை: 'வங்கிக் கணக்குக்கு, இணையதளம் வழியாக, பணம் அனுப்புவதற்காக, வங்கிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது, இன்று(ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.வங்கியில் கணக்கு வைத்திருப்போர், மற்றொரு கணக்குக்கு, என்.இ.எப்.டி., எனப்படும், தேசிய மின்னணு பணப்பரிமாற்றம் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., எனப்படும், உடனடி பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம், பணம் அனுப்பலாம். இதற்காக, வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி கட்டணம் வசூலிக்கிறது.

வங்கிகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து, சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன.மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த பரிமாற்றங்களுக்கான கட்டணம் முழுவதுமாக நீக்கப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்தது. அது, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. வங்கிகளும், இந்த சலுகையை, வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. அதனால், சேவைக் கட்டணத்தை விலக்கி கொள்வதாக பெரும்பாலான வங்கிகள் அறிவித்துள்ளன.