JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, July 12, 2019

பணி நியமனத்திற்கு கூடுதல் கல்வி தகுதியுள்ளவர் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது என்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியைவிட கூடுதல் தகுதியுடையவர், தனக்கு பணி வழங்கும்படி உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2013ல் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வி தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பித்து தேர்வான ஆர்.லக்ஷ்மி பிரபா என்பவர், நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக தகுதியாக பி.இ. படிப்பை முடித்திருந்ததால் தேர்வு நடைமுறையிலிருந்து அவரை விலக்குவதாக 2013 ஜூலை 31ம் தேதி மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டது.


இதனை எதிர்த்து லக்ஷ்மி பிரபா தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அவர் அளித்த உத்தரவு வருமாறு:

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள தமிழகத்தில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் செயல்பாடு மனுதாரரின் உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தேர்வு அறிவிப்பிலேயே கூடுதல் கல்வித்தகுதி உடையவர் பணியிலும் நியமிக்கப்பட்டாலும் நீக்கப்படுவார் என தெரிவித்துள்ளதாக மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், இந்த வழக்கில் மெட்டோ ரயில் நிறுவனம் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதைவிட மனுதாரர் கூடுதல் தகுதி பெற்றுள்ளார். எனவே, இந்த பணி நியமனத்தை பொறுத்தவரை கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம் கோர உரிமையில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.